Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருநெல்வேலி : மேலப்பாளையம் பகுதியில் சீரான குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாநகராட்சியின் கீழ், மொத்தமுள்ள, நான்கு மண்டலங்களுள், மிகப்பெரியதும், மாநகராட்சிக்கு அதிக வருவாய் ஈட்டித்தருவதுமான, மேலப்பாளையம் மண்டலத்துக்கு உட்பட்ட, 32-ஆவது வார்டுப்பகுதி முழுவதிலும், கடந்த மூன்று மாதங்களாக, சீரான குடிநீர் விநியோகப்படவில்லை.
இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதுடன், தண்ணீருக்காக, நெடுந்தொலைவு சென்று, நாள்தோறும் அதனை தங்களுடைய வீடுகளில் கொண்டு வந்து, சேர்க்கவும் வேண்டியதுள்ளது. மேலும் இங்குள்ள சில இடங்களில், மிகக் குறைவாக வருகின்ற, குடிநீரும் தூய்மையின்றி, சாக்கடை நீருடன் கலந்து வருகிறது. தொற்று நோய் ஏற்படும் அபாயமும், கடுமையான சுகாதாரச்சீர்கேடும், இப்பகுதியில் நிலவி வருகிறது.
இது தொடர்பாக, பலமுறை, மாநகராட்சி நிர்வாகத்திடம், எழுத்து மூலம், வீடியோ ஆதாரங்களுடன், முறையிட்டும் கூட, மாநகராட்சி உயர் அலுவலர்கள் அலட்சிய போக்குடன், நடந்து வருகின்றனர். இவற்றையெல்லாம் கண்டித்தும், சீரான குடிநீர் வழங்கிடக் கோரியும், இப்பகுதி மக்கள், நூற்றுக்கணக்கானோர், காலிக்குடங்களுடன், மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது மாநகராட்சிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, மாநகராட்சியினர் மற்றும் காவல் துறையினர், ஆர்ப்பாட்டக் காரர்களுடன், பேச்சுவார்த்தை நடத்தி, சமரசம் செய்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.